புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு கடும் எதிர்ப்பு: சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் - சாமளாபுரம் அருகே பரபரப்பு


புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு கடும் எதிர்ப்பு: சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் - சாமளாபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 9:59 PM GMT (Updated: 12 Sep 2019 9:59 PM GMT)

சாமளாபுரம் அருகே புதிதாக டாஸ்மாக் கடைக்கு திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்களாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். பெருமாம்பாளையம் பகுதியில் இருந்து மலைக்கோவில் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அங்கு மதியம் 4 மணி முதல் மது விற்பனை தொடங்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்தனர். அக்கம், பக்கத்து கிராம மக்களும் அங்கு வந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் அதிகாரிகள் வரும் வரை இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு டாஸ்மாக் மண்டல அதிகாரி, சாமளாபுரம் வருவாய் துறை அதிகாரி சதீஷ், சாமளாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பரிமளாதேவி ஆகியோர் வந்து பொதுமக்களிடம பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மண்டல அதிகாரியிடம் பொதுமக்கள் கூறியதாவது:- பெருமாம்பாளையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள் இந்த வழியாக செல்ல பயப்படுகிறார்கள். மேலும் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகே பெருமாம்பாளையத்தில் குடியிருப்புகள் உள்ளன. எனவே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இங்கு இயங்கினால் குடிமகன்களின் தொந்தரவு அதிகமாக இருக்கும். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்றனர்.

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மண்டல அதிகாரி, டாஸ்மாக் கடை மூடுவது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த வழியாக சென்ற கனரக வாகனங்களும், தனியார் நிறுவன வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருந்தன. அந்த வழியாக பஸ் போக்குவரத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டமும் அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தாலிக்கொடி , ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, போன்றவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியதால் டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story