ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிசை கேரள போலீசார் ஆஜர்படுத்தினர் - விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிசை கேரள போலீசார் ஆஜர்படுத்தினர் - விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:55 PM GMT (Updated: 12 Sep 2019 10:55 PM GMT)

மாவோயிஸ்டு டேனிசை கேரள போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஊட்டி,

கேரளா மாநிலம் அகழி என்ற இடத்தில் மாவோயிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணா (வயது 31) என்பவரை கேரள போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கொலக்கொம்பை போலீசார் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வாரண்ட் பெறப்பட்டு கேரளா போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, கேரள போலீசார் டேனிசை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் ஒரு நாள் தமிழக போலீசார் டேனிசை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் டேனிஸ் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த மாதம் 30-ந் தேதி கேரள போலீசார் திருச்சூர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கோவை சிறையில் இருந்து டேனிசை திருச்சூர் சிறைக்கு அழைத்து சென்றனர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து டேனிசை கேரள போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அரசு வக்கீல் நந்தகுமார் நீதிமன்ற காவலை ஒரு மாத காலத்துக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து, மாவட்ட நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதனை தொடர்ந்து கேரள போலீசார் டேனிசை திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

ஊட்டி கோர்ட்டில் டேனிஸ் ஆஜராக சென்ற போதும், வெளியே வரும் போதும் மாவோயிசம் ஜிந்தாபாத். இளைஞர்களே, மாணவர்களே காட்டை விற்கும் அரசுக்கு எதிராக போராடுவோம். காடுகளை பாதுகாக்க தோட்ட தொழிலாளர்களே ஒன்றிணைவோம். தனி தமிழ்நாடு அமைக்க ஒன்றிணைவோம் என்று கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story