அந்தியூர் அருகே பரிதாபம் தோட்டத்தில் வேலைசெய்தபோது போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு


அந்தியூர் அருகே பரிதாபம் தோட்டத்தில் வேலைசெய்தபோது போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 11:17 PM GMT)

அந்தியூர் அருகே தோட்டத்தில் வேலை செய்தபோது போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 51). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி மோகனசுந்தரி (45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி சென்னம்பட்டி கருங்கரடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமூர்த்தி அந்தப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். அவரது உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story