சுடுகாட்டுக்கு செல்லும் பாலத்தை சீரமைக்கக் கோரி: கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சவபாடை வைத்து போராட்டம்


சுடுகாட்டுக்கு செல்லும் பாலத்தை சீரமைக்கக் கோரி: கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சவபாடை வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:37 PM GMT (Updated: 12 Sep 2019 11:37 PM GMT)

சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சவபாடை வைத்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்,

பாகூர் அருகே சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளஞ்சந்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான சுடுகாடு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு செல்லும் பாதையில் உள்ள இணைப்பு பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. இதன் காரணமாக மேற்கண்ட 3 கிராமங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வதில் சிரமம் உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைக்கக்கோரி குருவிநத்தம், சோரியாங்குப்பம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை சார்பில் சவபாடை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கிளை செயலாளர்கள் வெங்கடாசலம், சாம்பசிவம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ராஜாங்கம், கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சரவணன், கலியன், ராமமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

அப்போது சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள சுடுகாடு மற்றும் குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியில் இருந்து துணிகளால் சுற்றப்பட்ட 2 பொம்மைகளை பாடைகளில் வைத்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக குருவிநத்தம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு எடுத்துவந்தனர். பின்னர் அங்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதும், தகனம் செய்வது போன்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முத்துலிங்கம், சண்முகம், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story