6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது


6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.

பெரம்பலூர், 

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரைபயிலும் மாணவ- மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு நேற்று தமிழ் தேர்வு நடந்தது. 6, 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழ் தேர்வு மதியம் 12.15 மணி வரை நடந்தது. இதேபோல் காலையில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தமிழ் 2-ம் தாள் தேர்வும், 12-ம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும் நடந்தது. மதியம் 7-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தமிழ் தேர்வும், 9-ம் வகுப்புக்கு தமிழ் 2-ம் தாள் தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வும் நடந்தது. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தனர். தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்து, உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுதுபொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல மாணவ- மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு அறையில் மாணவார்கள்``காப்பி'' அடிப்பதை தடுக்க ஆசிரியர்கள் தேர்வு நடக்கும் போது மாணவ- மாணவிகளை கண்காணித்தனர். மேலும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுது வதற்கு வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் பார்வையற்ற மாணவ- மாணவிகள் கேள்விக்கு பதில் சொல்ல சிறப்பு ஆசிரியர்கள் அதனை எழுதினர். 2 நாட்கள் விடுமுறைக்கு பின் வருகிற 16-ந் தேதி 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கில தேர்வும், 9, 10-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம் முதல் தாள் தேர்வும் நடைபெறுகிறது. வருகிற 23-ந் தேதியுடன் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story