சேலத்தில், வெவ்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


சேலத்தில், வெவ்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2019 10:45 PM GMT (Updated: 13 Sep 2019 7:49 PM GMT)

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம்,

சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 55). பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மனைவி அல்போன்ஸ் மேரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் சக ஊழியர் ஒருவர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். அவர் சரியாக பணம் செலுத்தாததால் தேவசகாயம் சம்பளத்தில் கடன் தொகை பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(33), தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு கோகிலா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகுமார், மனைவியிடம் போனில் தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பாட்ஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story