மாவட்டம் முழுவதும் பலத்த மழை : தென்பெண்ணை ஆற்றில் நீர் வர தொடங்கியது


மாவட்டம் முழுவதும் பலத்த மழை : தென்பெண்ணை ஆற்றில் நீர் வர தொடங்கியது
x
தினத்தந்தி 13 Sep 2019 11:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:50 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் நீர் வர தொடங்கியது.

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 96 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கலசபாக்கம்- 56, சேத்துப்பட்டு- 54.4, செங்கம்- 48.6, கீழ்பென்னாத்தூர்- 43.6, திருவண்ணாமலை- 41, போளூர்- 37.4, தண்டராம்பட்டு- 31.4, சாத்தனூர் அணை- 28.6, ஆரணி- 22.2, செய்யாறு- 16, வந்தவாசி- 15.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான தச்சம்பட்டு, தானிப்பாடி, தண்டராம்பட்டு, புதூர்செக்கடி, அகரம்பள்ளிபட்டு, சதாகுப்பம், தொண்டமானூர், வாழவச்சனூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.

இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓரளவுக்கு தண்ணீர் வரும் நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர் வர தொடங்கியுள்ளது.

மழையினால் வறண்டு கிடந்த ஏரி, குளம் பகுதியில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், ஓடைகளில் தண்ணீர் செல்வதாலும் கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story