8 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 136 வழக்குகள் தீர்வு


8 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 136 வழக்குகள் தீர்வு
x
தினத்தந்தி 14 Sep 2019 11:15 PM GMT (Updated: 14 Sep 2019 8:26 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 136 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய 8 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லில் 4 அமர்வுகளும், இதர இடங்களில் தலா ஒரு அமர்வும் என மொத்தம் 11 அமர்வுகள் நியமிக்கப்பட்டன.

ஒவ்வொரு அமர்விலும் நீதிபதி தலைமையிலான குழுவினர், வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கினர். இதில் திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி ஜமுனா தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா, கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோவன், குடும்ப நல நீதிபதி சிங்கராஜ், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரத்ராஜ், முதன்மை சார்பு நீதிபதி எழில்வேலவன், கூடுதல் சார்பு நீதிபதி செல்வக்குமார், கூடுதல் மகளிர் நீதிபதி லலிதாராணி, சிறப்பு சார்பு நீதிபதி சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்காக மொத்தம் 9 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் மோசடி, மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள் ஆகியவை விசாரிக்கப்பட்டன.

இதற்காக ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நீதிபதி தலைமையிலான குழுவினர் சமரச பேச்சு நடத்தி தீர்வு கண்டனர். இதன்மூலம் நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 136 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் தீர்வு தொகையாக ரூ.7 கோடியே 30 லட்சத்து 23 ஆயிரத்து 746 வழங்கப்பட்டது.

இவற்றில் 441 வங்கி வாராக்கடன் வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதில் ரூ.4 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 836 வழங்கப்பட்டது. அதேபோல் மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட 65 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதில் பழனி சப்-கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் தாலுகா சட்டப்பணிகள் குழுத்தலைவர் கோதண்டராஜ், மாஜிஸ்திரேட்டு ரகுபதிராஜா, விரைவு கோர்ட்டு நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 551 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்மூலம் ரூ.1 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 634 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

Next Story