காவிரி வடிநில பகுதிகளில் 350 நாற்று பண்ணைகள் அமைக்க திட்டம் ஜக்கிவாசுதேவ் தகவல்


காவிரி வடிநில பகுதிகளில் 350 நாற்று பண்ணைகள் அமைக்க திட்டம் ஜக்கிவாசுதேவ் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 8:54 PM GMT)

காவிரி வடிநில பகுதிகளில் 350 நாற்று பண்ணைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

காவிரி நதிக்கு புத்துயிரூட்டும் வகையில் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை தொடங்கிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவ் மரம் வளர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்காவிரியில் இருந்து மோட்டார்சைக்கிள் பேரணியை தொடங்கினார்.

இந்த பேரணி நேற்றுமுன்தினம் தஞ்சைக்கு வந்தது. நேற்றுகாலை தஞ்சையில் இருந்து திருவாரூருக்கு புறப்பட்ட ஜக்கிவாசுதேவ் சூரியம்பட்டியில் உள்ள ஈஷா நாற்று பண்ணைக்கு சென்றார். அங்கு மரக்கன்றுகளை நடவு செய்த ஜக்கிவாசுதேவ் பண்ணையில் பணி புரியும் கிராமப்புற பெண்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாற்று பண்ணைகள்

இந்த நாற்று பண்ணையில் எல்லா மரக்கன்றுகளும் முழுக்க, முழுக்க இயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. எந்தவித ரசாயன உரங்களையும் பயன்படுத்துவது இல்லை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் 40 நாற்று பண்ணை நடத்தும் அமைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஈஷா நாற்று பண்ணையில் வளரும் மரக்கன்றுகளுக்கு மட்டும் தான் வேரில், புழுக்கள் பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.

மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி அனைத்து ஈஷா நாற்று பண்ணைகளுக்கும் மகாத்மா இந்தியா கிரீன் மிஷன் என பெயர் கொடுக்க உள்ளோம். இப்போது எங்களிடம் 35 நாற்று பண்ணைகள் உள்ளன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் காவிரி வடிநில பகுதிகளில் 350 நாற்று பண்ணைகள் அமைக்க உள்ளோம். 10 ஆயிரம் விவசாயிகளுக்கு நாற்று பண்ணை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Next Story