ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்


ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:44 PM GMT (Updated: 14 Sep 2019 11:44 PM GMT)

சென்னையில் நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தந்தையிடம் பணம் பறிப்பதற்காக அந்த நர்ஸ் காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. காதலனுடன், நர்சு கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 24), மகள் வித்யா (22). வித்யா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள நண்பரின் திருமண விழாவில் பங்கேற்க சென்ற வித்யா, திருமணம் முடிந்து காரைக்காலில் இருந்து கோயம்பேடுக்கு பஸ் ஏறி விட்டதாக கடந்த 12-ந் தேதி செல்போன் மூலம் தனது அண்ணனிடம் தெரிவித்தார்.

அதற்கு மறுநாள் காலை மர்மநபர்கள் சிலர் ஆறுமுகத்தையும், விக்னேசையும் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யாவை கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினார்கள். இதுபற்றி விக்னேஷ் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வித்யாவை தீவிரமாக தேடி வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய வித்யா, கிண்டி செல்லும் மாநகர பஸ்சில் ஏறுவது தெரியவந்தது.

கிண்டியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அங்கு இருந்து புதுச்சேரி அரசு பஸ்சில் அவர் ஏறிச்சென்றதும், டிப்-டாப் உடையணிந்த நபர் ஒருவர் சூட்கேசுடன், வித்யாவுடன் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே வித்யா கடத்தப்படவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

வித்யாவும், அவருடன் சென்ற நபரும் கடலூரில் இருப்பது தெரியவந்தது. மேலும் வித்யாவுடன் இருந்த அந்த நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த போலீசார், அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அந்த நபர், வித்யா யாரென்று தெரியாது என்றும், தான் காரைக்காலில் இருப்பதாகவும், சந்தேகம் ஏற்பட்டால் காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு வரும்படியும், அங்கு தான் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காரைக்கால் விரைந்து சென்ற போலீசார், அங்கு இருந்த அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் வித்யாவின் காதலன் மனோஜ் என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

வித்யா, காரைக்காலில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்தபோது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோஜுக்கும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது சிங்கப்பூரில் வசித்த மனோஜுக்கு, வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தேவைப்படுவதாக காதலி வித்யாவிடம் கூறினார்.

தனது தந்தையிடம் நிலம் விற்ற பணம் ரூ.14 லட்சம் உள்ளது. அவருக்கு போன் செய்து என்னை கடத்தி விட்டதாக தெரிவித்தால் அந்த பணம் நமக்கு கிடைக்கும் என வித்யா கூறி உள்ளார். இதனை தொடர்ந்துதான் வித்யாவும், மனோஜும் சேர்ந்து இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தல் நாடகம் ஆடிய நாளில் தான் மனோஜ் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். மனோஜ் ஒரே நேரத்தில் வித்யா, காரைக்காலை சேர்ந்த அக்சயா மற்றும் அவருடைய மாமா மகள் என மூன்று பேரை காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மனோஜ், கடத்தல் நாடகத்தில் இருந்து தப்பிப்பதற்காக காதலியை கடலூரில் இருந்து சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்து, அவர் யாரென்று தெரியாது என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பஸ் மூலம் கோயம்பேடு பஸ் நிலையம் வந்த வித்யாவை அங்கு தயாராக இருந்த போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Next Story