மணப்பாறை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் காவிரி குடிநீர் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை


மணப்பாறை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் காவிரி குடிநீர் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:00 PM GMT (Updated: 15 Sep 2019 2:35 PM GMT)

மணப்பாறை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணப்பாறை,

மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் உள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வது காவிரி குடிநீர் தான். இதற்காக கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டுவரப்படுகிறது.

ஆனால் சமீபகாலமாக காவிரி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிவருகிறது. இதே போல் நேற்று காலை மணப்பாறைக்கு காவிரி நீர் கொண்டுவரப்படும் காவிரி குடிநீர் குழாயில் மணப்பாறையை அடுத்த கலிங்கப் பட்டி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீர் பீறிட்டு வெளியேறியது.

வீணான தண்ணீர்

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பீறிட்டு வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு வீணாக சென்றது. ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக வெளியேறுவதைப் பார்த்த பொதுமக்கள் இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, அந்த குழாயில் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வெளியேறுவது படிப்படியாக குறைந்தது. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் இன்றி மக்கள் காவிரி குடிநீரை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் நிலையில் குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கோரிக்கை

இதே நிலை நீடிப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவரும் நிலையில், தொடர்ந்து குடிநீர் வீணாவது மக்களை கடும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் குழாய் உடைப்பை உடனே சரிசெய்து இதுபோன்று குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story