சைக்கிள் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்தது; இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் பலி


சைக்கிள் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்தது; இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 5:14 PM GMT)

வலங்கைமான் அருகே சைக்கிள் மீது மோதிவிட்டு தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

வலங்கைமான்,

சிதம்பரம் அருகே உள்ள ஆண்டிகுளி பகுதியில் இருந்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 20-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த சேக்யூசுப் மகன் அப்துல்முனாப் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடி என்ற இடத்தில் சென்ற போது சாலையின் குறுக்கே ஒரு மாடு வந்துள்ளது. இதனால் மாடு மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கருப்பட்டிபள்ளத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளர்அய்யாசாமி ஓட்டி வந்த சைக்கிள் மீது வேன் மோதியது. இதை தொடர்ந்து வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரான அய்யாசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் வந்த 5 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதில் 11 பேர் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 3 பேர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுமம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story