பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2019 9:30 PM GMT (Updated: 15 Sep 2019 6:48 PM GMT)

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கடன் உதவி வேண்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் சிறு தொழில், வியாபாரம் செய்ய அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை ஆகும்.

பெண்களுக்காக புதிய பொற்கால திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் வசூலிக்கப்படும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும்.

சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அதிகாரியால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5-ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், பிறப்பிட சான்று, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைத்து இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story