கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 7:15 PM GMT)

கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள திருவோணம் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 7 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று காலை அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், தயிர், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சி

விழாவையொட்டி கோவில் முன்பு கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர். மாலையில் மா விளக்கு போட்டும், பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

வடக்கலூர்

இதேபோல, கறம்பக்குடி அருகே உள்ள வடக்கலூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி கடைசி ஞாயிற்றுக் கிழமை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Next Story