சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர்கள் 2 பேர் பலி இரணியல் அருகே பரிதாபம்


சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர்கள் 2 பேர் பலி இரணியல் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 7:34 PM GMT)

இரணியல் அருகே சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பத்மநாபபுரம்,

திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திங்கள்நகரில் இருந்து மைலோடு நோக்கி புறப்பட்டார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த விபின் (19) என்பவர் பயணம் செய்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விபின் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் இரணியல் அருகே ஆலங்கோடு சந்திப்பை சென்றடைந்த போது திடீரென உதயனின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

2 பேர் சாவு

இதில் படுகாயமடைந்த அவர்கள் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story