நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது


நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2019 10:00 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, தங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை நாமக்கல் ராமாபுரம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினராம் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதே மாநிலத்தை சேர்ந்த காந்திலால் (36) என்பவரின் கடையில் வேலை செய்து வருவது தெரியவந்தது. நாமக்கல் கடைவீதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் காந்திலால் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.

பின்னர் காந்திலால் கொடுத்த தகவலின் பேரில் நாமக்கல் ராமாபுரம்புதூர் குட்டை தெருவில் வாடகை வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காந்திலால், ரத்தினராம், ராமாபுரம்புதூரை சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் கடைவீதியில் மிட்டாய் கடை நடத்தி வரும் ரமேசும், காந்திலாலிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்வது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story