மோட்டார் சைக்கிளை 'சர்வீஸ்' செய்வதற்கு தாயார் பணம் தராததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்கு தாயார் பணம் தராததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Sep 2019 10:00 PM GMT (Updated: 16 Sep 2019 1:10 PM GMT)

நாகூரில் மோட்டார் சைக்கிளை 'சர்வீஸ்' செய்வதற்கு தாயார் பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர்,

நாகூர் மெயின் சாலை அருகே குணா நகரை சேர்ந்தவர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கமலா. இவர்களுடைய மூத்த மகன் குகன் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் குகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக  நாகூருக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது தாயார் கமலாவிடம் மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதில் மனமுடைந்த குகன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.  வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய கமலா, குகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story