அந்தியூர் அருகே ஆற்றில் மூழ்கி இறந்த 2 சிறுமிகளின் சாவில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை


அந்தியூர் அருகே ஆற்றில் மூழ்கி இறந்த 2 சிறுமிகளின் சாவில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 7:09 PM GMT)

அந்தியூர் அருகே ஆற்றில் மூழ்கி இறந்த 2 சிறுமிகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நடவடிக்கை எடுக்க கூறி பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் கழுதப்பாளி பகுதியை சேர்ந்த ஆறுசாமி-லட்சுமி தம்பதியின் மகள் ஓவியா (வயது 14). அதே பகுதியை சேர்ந்த கரியான்-வீரம்மாள் தம்பதியின் மகள் சுகந்தி (15). ஓவியாவும், சுகந்தியும் கடந்த ஜனவரி மாதம் பவானி ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களுடைய சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுமிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

ஓவியா, சுகந்தியின் பெற்றோர்களான நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். ஓவியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சுகந்தி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர்கள் 2 பேரும் தோழிகள். கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்று வருவதாக எங்களிடம் கூறிவிட்டு 2 பேரும் வெளியில் சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து ஓவியாவும், சுகந்தியும் ஆப்பக்கூடல் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் பிணமாக மிதந்தனர். அவர்களுடைய இறப்பு குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓவியா, சுகந்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே பவானி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பலமுறை புகார் மனு கொடுத்து உள்ளோம். அவரும் தனிப்படை அமைத்து 10 நாட்களில் கண்டுபிடித்து கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை இறப்பின் காரணம் தெரியவில்லை.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓவியா, சுகந்தி ஆகியோர் ஆற்றங்கரையோரம் நின்று இருப்பதைபோல புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் வெளியானது. இந்த புகைப்படத்தை ஒருவர் செல்போனில் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது அணிந்திருந்த அதே உடையில்தான் அவர்களுடைய உடல்களும் மீட்கப்பட்டன. நாங்கள் மகள்களை இழந்து தவித்து வருகிறோம். எனவே அவர்களுடைய சாவில் உள்ள மர்மத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

Next Story