சாலைகளை 15 நாட்களுக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் எச்.வசந்தகுமார் எம்.பி. பேட்டி


சாலைகளை 15 நாட்களுக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் எச்.வசந்தகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 10:33 PM GMT)

குமரி மாவட்டத்தில் மோசமான சாலைகளை 15 நாட்களுக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று எச்.வசந்தகுமார் எம்.பி.க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று காலை அவர் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு நடைபெறும் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி, நடைமேடை, நடை மேம்பால பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பதில் சொல்ல வேண்டும்

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது. ரெயில்வே துறையை நம்பி 13 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு குடும்பத்துக்கு 10 பேர் என்றால் 1 கோடியே 30 லட்சம் மக்கள் ரெயில்வே கொடுக்கின்ற சம்பளத்துக்காக காத்திருந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஒருபோதும் நீங்கள் தனியார்மயம் ஆக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் பேசி, அதை பதிவு செய்து, மத்திய மந்திரியிடமும் மனுவாக கொடுத்துள்ளேன்.

சமீபத்தில் ரெயில்வே துறை பொதுமேலாளரை சந்தித்து குமரி மாவட்டத்தில் நடைபெறும் ரெயில்வே துறை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினேன். அவர் 2020- 2021-க்குள் முடித்து விடுவதாக கூறியிருக்கிறார். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதை இன்னும் திறக்கவில்லை. மத்திய அரசு 6 வருடத்துக்கு முன் கட்டிய கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவில்லை. இது மாபெரும் தவறு. ரெயில்வே துறையை சேர்ந்த மந்திரியும், அதிகாரிகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சிரமம்

களியக்காவிளை-நாகர்கோவில் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. இதுதொடர்பாக நான் அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறேன். 15 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள். சில இடங்களில் ‘பேட்ஜ் ஒர்க்‘ செய்கிறார்கள். அதையும் சரியாக செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம். 15 நாட்களுக்குள் சாலைகளை சீரமைக்காவிட்டால் தொடர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இந்தியை திணிக்கத்தான் கூடாது. படிக்க விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் வெற்றி கிடைக்குமா? என்ற அச்சத்தின் காரணமாகவும், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இது அளவுகோலாக அமைந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாகவும் தமிழக அரசு இதை தள்ளி வைத்துள்ளது. நிச்சயமாக அடுத்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விட்டால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றை எம்.பி.க்களிடம் மக்கள் கேட்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Next Story