திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 8:19 PM GMT)

பெங்களூருவில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு கம்மனஹள்ளியில் வசித்து வருபவர் அருண் (வயது 35). தனியார் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அருணின் பள்ளி பருவத்தில் அனுசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அவருடன் படித்து வந்தார். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் வைத்து அங்கு துப்புரவு தொழிலாளர்கள் பிரிவில் மேற்பார்வையாளராக பணி செய்து வரும் அனுசாவை, அருண் சந்தித்தார். 2 பேரும் பேசி கொண்டனர்.

இந்த வேளையில் தன்னை மனைவி விவாகரத்து செய்து சென்றதாக அருண் கூறியுள்ளார். அதேநேரத்தில் தனது கணவர் உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக அனுசா அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2 பேருக்கும் இடையே திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது. இதை யடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி அனுசாவை, அருண் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்ற அனுசாவுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அருண் கற்பழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அனுசா கேட்டதற்கு அவரை திருமணம் செய்து கொள்வதாக அருண் கூறியுள்ளார். இருப்பினும் அருண் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் அடிக்கடி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்கும்படி அருண், அனுசாவை வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கும்போது அவர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை குடும்பத்தினருக்கு காண்பிப்பதாக மிரட்டி அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் அனுசாவின் தங்க நகைகளை எடுத்து கொண்ட அருண், அவருடைய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வரை எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற தொடர் தொல்லையால் பாதிக்கப்பட்ட அனுசா, சம்பவம் குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story