தி.மு.க. பிரமுகரை வழிமறித்து பணம் பறிப்பு வீட்டிற்கு அழைத்துச்சென்று மனைவியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த கும்பலுக்கு வலைவீச்சு


தி.மு.க. பிரமுகரை வழிமறித்து பணம் பறிப்பு வீட்டிற்கு அழைத்துச்சென்று மனைவியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 8:51 PM GMT)

திண்டிவனம் அருகே தி.மு.க. பிரமுகரை வழிமறித்து பணம் பறிக்கப்பட்டது. மேலும் அவரை கத்திமுனையில் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவரது மனைவியிடம் ரூ.5 ஆயிரம் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே தீவனூரை அடுத்த ஆசூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). தி.மு.க. பிரமுகரான இவர், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் குமரேசன் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி, இரவு 12 மணிக்கு தீவனூருக்கு வந்தார். அங்கு பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி குமரேசன் வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது ஆசூர் கூட்டு சாலையில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் அவரை வழிமறித்தது. இதனால் அச்சமடைந்த அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த கும்பல், குமரேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியது. உடனே அவர், தனது சட்டைப்பையில் இருந்த ரூ.1,200-ஐ எடுத்துக்கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட கும்பல், ரூ.10 ஆயிரம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது. அதற்கு அவர், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். உடனே அந்த கும்பல், அப்படியானால் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துக்கொடு என்று கூறியது.

ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டல்

இதையடுத்து அந்த கும்பலில் ஒருவர், குமரேசனின் மோட்டார் சைக்கிளில் ஏறி பின்பகுதியில் அமர்ந்து கொண்டு, அவரது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டார். மற்றவர்கள், அவர்களது மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்தனர். வீட்டுக்கு சென்றவுடன் குமரேசனின் மனைவியிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உன் கணவரை உயிரோடு விட்டு விடுவோம். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டியது.

இதனால் பதறிப்போன அவர், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அந்த கும்பலிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிக்கொண்ட அந்த கும்பல், இது குறித்து போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

6 பேருக்கு வலைவீச்சு

இது குறித்து குமரேசன் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தீவனூரை சேர்ந்த காத்து மகன் ராஜ்குமார்(29), கன்னியப்பன் மகன் அருள் உள்பட 6 பேர் தன்னை வழிமறித்தும், வீட்டிற்கு அழைத்து வந்தும் பணத்தை பறித்துச்சென்றதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story