விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை; இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தல்


விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை; இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 8:52 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு சிறு தொழில்களும் விவசாயமும் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற தொழில்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. மேலும் வெளி மாநில தொழிலாளர்களும் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது போலீசாருக்கு ஒரு சவால் நிறைந்த செயலாகவே உள்ளது.

மாவட்டத்தில் ராஜபாளையம் தாலுகா தேவதானத்தில் 2 கொலைகள் ராஜபாளையம் நகரில் ஒரு கொலை என தொடர்ச்சியாக நடந்துள்ளது. இதேபோல விருதுநகர் அருப்புக்கோட்டை போன்ற இடங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் உருவாக்கி உள்ளது. காவல் துறையின் கவனங்கள் வாகன சோதனையில்தான் அதிகமாக இருப்பதாக அறிகிறோம். எனவே காவல் துறை இத்தகைய சம்பவங்கள் தொடராமல் இருக்க மக்களிடையே அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமனம் செய்ய வேண்டும். பதற்றமான இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்கள் தங்கி பணிபுரியும் இடம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story