திருப்புவனம் வைகையாற்றில் மாணவர் கொன்று புதைப்பு: மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்


திருப்புவனம் வைகையாற்றில் மாணவர் கொன்று புதைப்பு: மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 9:21 PM GMT)

திருப்புவனம் வைகையாற்றில் மாணவரை கொன்று புதைத்த வழக்கில் நேற்று மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது.

திருப்புவனம்,

திருப்புவனம் தேரடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்து என்ற அஜித்குமார்(வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி தனது சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரை தேடுவதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த திவாகர் என்ற வாலிபரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவரும், சிலரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக மாணவர் அஜித் குமாரை திருப்புவனம் வைகையாற்றின் நடுப்பகுதிக்கு வரவழைத்து, அவரை கத்தியால் வெட்டி உள்ளனர். மேலும் ஆத்திரம் தீராமல் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து வைகையாற்றில் குழி தோண்டி உடலை புதைத்தனர்.

இதையடுத்து திவாகரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடி வந்தனர். இந்தநிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த அய்யனார்(21), திருப்புவனம் புதூர் பஜனை மடத்தைச் சேர்ந்த அஜய் (21), திருப்புவனம் புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21), திருப்புவனம் சேதுபதி நகரைச் சேர்ந்த சங்கர், திருப்புவனம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த சிவமணி ஆகிய 5 பேரை நேற்று திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் மதுரை கோர்ட்டில் நேற்று சரணடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ராமேசுவரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் முத்து என்ற அஜித்குமாருக்கு தொடர்பு உள்ளது என்று தெரிய வந்தது. இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாணவரை கொலை செய்து புதைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story