தண்டராம்பட்டு அருகே, லாரி டிரைவர் அடித்து கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


தண்டராம்பட்டு அருகே, லாரி டிரைவர் அடித்து கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 9:49 PM GMT)

தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள பெரும்பாக்கம் மதுரா குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் புதுச்சேரியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பானுப்பிரியா (32). இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், ஹஷினி என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் சரி வர குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து வெங்கடேசன் மதுரா குப்பத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவில் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்தக்காயங்களுடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story