திறந்தவெளி விளம்பரத்துக்கான அனுமதியை ரத்துசெய்யவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


திறந்தவெளி விளம்பரத்துக்கான அனுமதியை ரத்துசெய்யவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:45 PM GMT (Updated: 16 Sep 2019 11:37 PM GMT)

திறந்தவெளி விளம்பரங்கள் வைக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டங்களை ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மதிக்காததால் சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் மக்களின் நன் மதிப்பை இழக்கின்றனர். திறந்தவெளி விளம்பரங்களை முழுமையாக தடை செய்து புதுச்சேரி சட்டமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அவ்வப்போது முதல்-அமைச்சர், அமைச்சர்களாக இருப்பவர்களே அந்த சட்டத்தை காலில் போட்டு மிதித்து கேவலப்படுத்துவது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

ஆனால் தற்போது அந்த சட்டத்தை எம்.எல்.ஏ.க் களுக்கே தெரியாமல் ஒரு சிலருடைய சுய நலத்திற்காக திறந்தவெளி விளம்பரம் செய்ய அனுமதி அளித்து மறு அரசாணை வெளியிட்டது உள்நோக்கம் கொண்டதாகும். தமிழகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மனதில்கொண்டு இப்போது கூக்குரல் எழுப்புவது ஏனென்று தெரியவில்லை. அதுவும் அனுமதியின்றி யாரும் பேனர் வைக்கக்கூடாது என்ற அரசின் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

திறந்தவெளி விளம்பரங்கள் தடையென்று சட்டம் உள்ள நிலையில் யாருக்கு அனுமதி கொடுத்தீர்கள்? அதுவே சட்டப்படி குற்றமில்லையா? சட்டத்தை பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித்துறையும் கண்டு கொள்ளாமல் ஒருசிலர் குறுக்கு வழியில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்க அனுமதி கொடுப்பது சட்ட விரோத செயலாகும்.

தடை சட்டம் இருக்கும்போது ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு வர்த்தக ரீதியில் விளம்பரம் செய்துகொள்ள அனுமதி வழங்குவது ஏன்? நகரப்பகுதி முழுவதும் கடைகளின் மேல் ராட்சத விளம்பர போர்டுகள் வைக்க ஏன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? இப்படிப்பட்ட விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடப்பது அரசுக்கு தெரியாதா? அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் அனைத்து திறந்தவெளி விளம்பரங்களையும் உடனே ரத்துசெய்ய வேண்டும்.

உடனடியாக அனைத்து விளம்பர போர்டுகளையும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகளை மிரட்டும் கும்பல் எதுவாக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். பொதுப் பணித்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து விளம்பர அனுமதியையும் உடனடியாக ரத்து செய்யவேண்டும். எந்த விளம்பரத்துக்கும் அரசு இடம் கொடுக்காமல் அகற்றும் பணியை செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story