7 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்


7 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 5:06 PM GMT)

7 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் திருச்சி பி.எஸ்.என்.எல். மாவட்ட முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயல் தலைவர் ராமகிரு‌‌ஷ்ணன் முன்னிலை வகித்தார். தேசிய தொலை தொடர்பு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.கே. மதிவாணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க மாநில செயலாளர் ஆனந்தன், அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் அசோக்குமார், அமல்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

சி.கே. மதிவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்கள் வரையிலான நிரந்தர தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத சம்பளம் மார்ச் மாதம் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது.

தெருவில் இறங்கி போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதற்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளை மத்திய நிதி அமைச்சகம் நிராகரிப்பு செய்து உள்ளது. இது தொழிலாளர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். மத்திய அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடவேண்டும் என முடிவு செய்து உள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமானால் அடுத்த கட்டமாக குடும்பத்துடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story