தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.1 கோடிக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.1 கோடிக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 6:11 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.1 கோடிக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். முதல் விற்பனையை கிருத்திகா பெற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் ஜரிகையுடன் கூடிய புடவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், காஞ்சீபுரம் மற்றும் ஆரணி பட்டு புடவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனைக்கு வந்து உள்ளன. இதுதவிர ஆர்கானிக் மற்றும் காட்டன் புடவைகள், மெத்தைகள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் ஏராளம் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஆண்டு நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.80 லட்சமும், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.20 லட்சமும் என மொத்தம் மாவட்டத்திற்கு ரூ.1 கோடிக்கு ஜவளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் சேலம் மண்டல மேலாளர் வெற்றிவேல், நாமக்கல் கிளை விற்பனை மேலாளர் செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story