அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்


அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:15 PM GMT (Updated: 17 Sep 2019 7:21 PM GMT)

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று, சின்னமுத்தூர் பகுதியில் உள்ள முத்தூர் அணையையும், கார்வழி ஊராட்சியில் உள்ள ஆத்துப்பாளையம் அணையையும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சியில் நடுப்பாளையம் முதல் ஆவுத்திப்பாளையம் வரையில் உள்ள வாய்க்கால் தூர்வாரும் பணியையும், கரூர் ஊராட்சி ஒன்றியம் மூலிமங்கலத்தில் நொய்யல் ஒரத்துப்பாளையம் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர்.

பாசன வசதிபெறும்

இதைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறும்போது, அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது. பொதுப்பணித்துறையின் சார்பில் கீழ்பவானி ஆற்றில் இருந்து வரும் நீரானது அஞ்சூர் வாய்க்கால் வழியாக கடைமடை சென்றடைகின்றது. இதன் நீளம் சுமார் 3 கிலோ மீட்டராகும். இந்த வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 775 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பாக ஓலப்பாளையம் பிரிவு முதல் பழமாபுரம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகின்றது என்றார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, பொதுப்பணித்துறை நொய்யல் வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் முருகானந்தம், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், புஞ்சை புகளூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன், காகிதபுரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சதாசிவம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர்கள் பட்டாபிராமன், தங்கராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


Next Story