கரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 7:27 PM GMT)

ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து கரூர் ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்,

கரூர் கிளை டி.ஆர்.யூ. தொழிற்சங்கம் சார்பில் கரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் கிளை தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகேசன், மண்டல உதவி தலைவர் சாம்பசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ரெயில்வே ஊழியர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வேதுறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும்

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘நீண்டதூர பயணத்திற்காக பலரும் ரெயில்களை தான் நாடுகின்றனர். அப்படி இருக்கையில் ரெயில்வே தனியார்மயமாக்கப்படும் போது டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதால் ஏழை, எளிய பொதுமக்கள் பாதிப்படையக்கூடும். ரெயில்வேக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் தனியாருக்கு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே தனியார்மயமாக்கும் முடிவினை திரும்பபெற வேண்டும்’ என்றனர். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் ரத்தினம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story