4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு


4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 9:34 PM GMT)

4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சிக்கும், அதேபோல் நத்தத்தில் இருந்து மதுரை வரையும் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக பரளிபுதூர், லிங்கவாடி, செல்லப்பநாயக்கன்பட்டி, சாத்தம்பாடி கிராமங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கவில்லை.

எனவே, இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையை 4 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும், மரங்களுக்கு வனத்துறை மூலம் இழப்பீடு வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தம் பஸ்நிலையம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் போராட்ட குழுவினருடன், அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) அனிதா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் விவசாயிகள் போராட்ட குழு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி, வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் சேக்சிக்கந்தர் பாட்சா, மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் சித்திக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், லிங்கவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் உத்தமன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் ஒத்திவைப்பு

இந்த கூட்டத்தில் இழப்பீடு தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களுக்கான மதிப்பீடு விவரம் வந்ததும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பரளிபுதூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் விடுபட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகையும், ரெட்டியபட்டி விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடும் வழங்கப்படும். அதேபோல் புறம்போக்கு நிலங்களில் இருந்த வீடுகள், கோவில்களை அகற்றியது குறித்து தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளரிடம் மதிப்பீடு பெற்று கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர். 

Next Story