தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல் - அதிகாரிகள் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல் - அதிகாரிகள் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதால், அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாளவாடி,

தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தாளவாடி, சிக்கள்ளி, பனக்கள்ளி, மெட்டல்வாடி, திகினாரை, தொட்டகாஜனூர், கொட்டவாடி ஆகிய பகுதிகளில் சிலர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை வாங்குகின்றனர்.

பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனம், சரக்கு வாகனம் மூலம் கர்நாடக மாநில பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு கடத்தி சென்று அந்த அரிசியை விற்பனை செய்து வருகின்றனர். அங்கு அந்த அரிசி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.


இதுகுறித்து தாளவாடியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘இங்குள்ள சிலரிடம் இருந்து ரேஷன் அரிசி விலைக்கு வாங்கப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி செல்லப்பட்டு அங்குள்ள கிராம மக்களிடம் கிலோ ஒன்று ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல 20 வழிகள் உள்ளன. இதனால் அரிசி கடத்தல் மிகவும் எளிதாக நடைபெற்று வருகிறது. எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story