தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை குறைக்கப்படும்  - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை குறைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு செல்லும் கால்வாய் முட்புதர்களால் மண்டி காணப்பட்டது. இதனால் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சின்னமுத்தூரில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணை வரை சுமார் 10 கிலோ மீட்டர் செல்லும் கால்வாய் தூர்வாரப்பட்டது. தூர்வாரும் பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணைக்கு வந்து அணையை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காலங்களில் நொய்யல் ஆற்றில் அதிக அளவில் சாயக்கழிவு நீர் சென்றதால் இந்த தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு நீதிமன்ற தடை உத்தரவின் படி தண்ணீர் கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் சென்ற போது இந்த தடுப்பணையில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு 4 நாட்கள் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெளியேறும் உபரி நீர் கரூர் மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி கிராம பகுதிகளில் ஓரளவு குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்து வருகிறது. மேலும் கரூர், அரவக்குறிச்சி தொகுதிகள் மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்திட ரூ.250 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள மின்சார பஸ்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி மத்திய, மாநில அரசு இணைந்து நிதி உதவியுடன் தமிழகத்தில் 820 மின்சார பஸ்கள் இயக்க அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மின்சார பஸ்கள் முதலில் மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்பட்டு பின்னர் படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் போக்குவரத்து துறை மூலம் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு போக்குவரத்து விதி மீறலுக்கு அபராத தொகையை உயர்த்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது முத்தூர் அ.தி.மு.க பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை சங்கத்தலைவர் ஆர்.வி.சுதர்சன், முத்தூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விமலநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக ஈரோட்டில் இருந்து தாண்டாம்பாளையம் வரை வரும் அரசு டவுன் பஸ்சை பெருங்கருணைபாளையம், கல்லேரி, செங்கோடம்பாளையம் வழியாக முத்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், ரங்கசாமிகோவில் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து சொரியம்பாளையம் வரை செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தற்காலிக தரைப்பாலத்திற்கு மாற்றாக புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டிட வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களும் மற்றும் முத்தூர் சரக்கு, வேன் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சார்பில் சரக்கு ஆட்டோக்களில் மூடைகளை ஏற்றி இறக்கி செல்லும் காலத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அமர்ந்து இருந்தால் போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக கூறி லைசென்சை பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story