ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 2127 அங்கன்வாடி மையங்களில் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 646 குழந்தைகளும், 52 ஆயிரத்து 833 வளர்இளம் பெண்களும் ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பெற்று உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் வளர் இளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஊட்டச்சத்து குறித்த விபரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனம் பயணித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் முன்னிலையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Next Story