சாணார்பட்டி அருகே அரளி விதைகளை அரைத்து குடித்து கர்ப்பிணி தற்கொலை


சாணார்பட்டி அருகே அரளி விதைகளை அரைத்து குடித்து கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 9:48 PM GMT)

சாணார்பட்டி அருகே அரளி விதைகளை அரைத்து குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை களத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 25). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. அவருடைய மனைவி சித்ரா (வயது 19). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சித்ரா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சித்ரா மனமுடைந்து காணப்பட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அரளி விதைகளை...

நேற்று காலையில் அவர் அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சித்ரா ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story