வகுப்புகளை புறக்கணித்து மன்னர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்


வகுப்புகளை புறக்கணித்து மன்னர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 7:30 PM GMT)

வகுப்புகளை புறக்கணித்து மன்னர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மதுரை சாலையில் மன்னர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் புதுக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 164-ஐ ரத்து செய்ய வேண்டும். 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இதற்காக பிறப்பித்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொது தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களை தண்டிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மீண்டும் 2-வது நாளாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதல் மதியம் வரை நீடித்த இந்த போராட்டம் மதியத்திற்கு பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story