நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 8:28 PM GMT)

நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டத்தில் அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தியை அவதூறாக பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் அலெக்ஸ், மாவட்ட துணை தலைவி அனுஷா பிரைட், ஜாண் சவுந்தர், மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, கிறிஸ்டி ரமணி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

உருவப்படம் எரிப்பு

மார்த்தாண்டம் பஸ்நிலையம் முன் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்த சிறிது நேரத்தில் சிலர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை காரில் இருந்து கொண்டு வந்தனர். அந்த உருவபொம்மையை காங்கிரசார் எரிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவப்படத்தை கொண்டு வந்து அவர்கள் தீயிட்டு எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story