காங்கேயம் அருகே, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


காங்கேயம் அருகே, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 9:41 PM GMT)

காங்கேயம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காங்கேயம், 

காங்கேயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 24). இவர் காங்கேயத்தில் உள்ள தேங்காய் களத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட மாணவியின் தாயார், மாணவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவி, நடந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், மாணவியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் சிவாவை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story