கடலூரில், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 10:08 PM GMT)

கடலூரில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.

கடலூர், 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்புச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் போஷான் அபியான் திட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

மேலும் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் வண்ணக்கோலம் வரைந்திருந்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் இதுகுறித்து மாவட்ட திட்ட அதிகாரி பழனி கூறும்போது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும், தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களையும் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.


Next Story