இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது


இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2019 11:15 PM GMT (Updated: 19 Sep 2019 5:36 PM GMT)

வையம்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி(வயது 43). இவர் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 19 வயது மகளும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது மகளை கணபதி மொபட்டில் வேலைக்கு அழைத்துச்சென்று பணி முடிந்ததும் இருவரும் வீடு திரும்புவார்கள்.

இதேபோல் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்து விட்டு கணபதி தனது மகளை மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வேனில் வந்தவர்கள் வழி கேட்பது போல் நடித்து திடீரென கணபதியின் மகளை வலுக்கட்டாயமாக பிடித்து வேனில் ஏற்றினர். இதைத்தடுக்க முயற்சித்த கணபதியையும் வேனில் ஏற்றினார்கள். பின்னர் தந்தை, மகளை கடத்திக்கொண்டு வேன் மின்னல் வேகத்தில் புறப்பட்டது.

இதைப்பார்த்த பொதுமக்கள் பலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் வேனை விரட்டிச்சென்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் பக்கிரிகரடு என்ற இடத்தில் மடக்கிப் பிடித்தனர். உடனே வேனில் இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 பேரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் கணபதி அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், குப்பனம்பட்டியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி குழந்தைவேல் என்பவருக்கு திருமணம் செய்ய, கணபதியின் மகளை வேனில் கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைவேல், செல்லபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அமயபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (21), மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்த கிருபாகரன் (22), சிதம்பரத்தான்பட்டியைச் சேர்ந்த கிளம்பன் சூர்யா (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story