அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 7:07 PM GMT)

அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி விளம்பர தட்டி, பதாகைகள் வைப்பவர்கள் மீதும், விதி மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பர தட்டிகள், பதாகைகள் நிறுவ அனுமதி விதிகள், 2011 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920-ன்படி, கல்வி நிறுவனங்கள் முன்பு, கோவில்கள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைபிரிவு கொண்ட மருத்துவமனைகள் முன்பு, சாலை அல்லது தெரு சந்திப்புகளின் இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்குள் மற்றும் சிலைகள் அல்லது நினைவு சின்னங்கள் முன்பாகவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் விளம்பர தட்டிகள், பதாகைகள் வைக்கக்கூடாது.

ஒரு ஆண்டு சிறை தண்டனை

அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதிகளுக்கு உட்பட்ட அளவுகளில் மட்டுமே விளம்பர தட்டிகள், பதாகைகள் அமைக்க வேண்டும். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகள், பதாகைகளை உரிய அலுவலர்கள் அகற்றி அதற்கான தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு சட்டம் 2011-ல் 2, சேர்க்கை பிரிவு 285-ஐ மற்றும் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம், தமிழ்நாடு சட்டம் 2000 இல் 26 இன்படி, உரிய அலுவலரிடம் இருந்து அனுமதி பெறாமல் விளம்பர தட்டிகள், பதாகைகள் வைப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story