அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீர் சாவு


அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீர் சாவு
x
தினத்தந்தி 19 Sep 2019 10:15 PM GMT (Updated: 19 Sep 2019 7:15 PM GMT)

அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீரென இறந்தார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில் உள்ள ரெங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 80). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சசிக்குமார். இவர்கள் இருவரது வீட்டின் அருகே உள்ள நடைபாதையை செல்லம்மாள் ஆக்கிரமித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகுமார், செல்லம்மாளிடம் முறையிட்டும் ஆக்கிரமிப்பை விலக்கி கொள்ளவில்லை. இதனால் சசிகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் தனது இடத்தை அளவீடு செய்து தருமாறு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சசிகுமாரின் வீட்டை அளவீடு செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூதாட்டி சாவு

இதையடுத்து வேலம்பாடி கிராமத்திற்கான கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோர் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்லம்மாள் தொடர்ந்து கூச்சலிட்டார். அப்போது திடீரென மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதனால் இடத்தை அளவிடும் பணியை பாதி யிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் செல்லம்மாளின் உடலை அவரது உறவினர்கள் எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story