திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை 23 பேருக்கு ஜெயில் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை 23 பேருக்கு ஜெயில் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Sep 2019 11:30 PM GMT (Updated: 19 Sep 2019 7:26 PM GMT)

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை போன வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 23 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டாரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

சயன நிலையில் பெருமாள்

இந்த கோவில் இந்தியாவில் உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்று. இங்கு கோவில் கருவறையில் 22 அடி நீளத்தில் சயன நிலையில் கம்பீரமாக ஆதிகேசவ பெருமாள் வீற்றிருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், சயன நிலையில் உள்ள சிலை கல்லால் ஆனது கிடையாது. 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசர்க்கரை படிமம் என்கிற மூலிகை கலவையால் ஆனது.

எனவே மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது. மேலும் சயன நிலையில் உள்ள பெருமாளின் தலையில் தங்க கிரீடத்தில் விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. பெருமாளின் உடலில் நகைகளும் தங்க தகட்டால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாக கொள்ளையடிக்கப்பட்டதாக கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது. பொதுமக்களிடமும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தகையை பரபரப்புக்கு இடையே பூசாரிகள் துணையுடன் கோவில் நிர்வாகிகள், தேவஸ்தான ஊழியர்கள் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து திருவட்டார் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கை விசாரித்தனர்.

10 வருடங்களாக கைவரிசை

விசாரணையில், சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க பூனூல், தங்க கவச தகடு, வைரக்கிரீடம் போன்றவை திருட்டு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது வெளியில் தெரியாமல் இருக்க கோவில் பூசாரிகளும், ஊழியர்களும் தங்க கவசத்திற்கு பதிலாக எண்ணெய் டின் தகட்டின் மீது தங்க முலாம் பூசி சாமி சிலையில் வெட்டி எடுத்த பகுதியில் இணைத்து வைத்திருந்தனர். இதேபோல் வைரக்கிரீடத்திற்கு பதிலாக தங்க தகடு போன்ற தாளால் ஆன காகித கிரீடமும் பெருமாளின் தலையில் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சுமார் 10 வருடங்களாக கோவில் சாமி சிலை நகைகள் சிறிது, சிறிதாக கோவில் பூசாரிகளின் துணை கொண்டும், தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடனும் சுமார் 6½ கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களும், நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகையின் அப்போதையை மதிப்பு ரூ.40 லட்சமாகும். இதனையடுத்து வேலை செய்த கோவில் பூசாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து 4¼ கிலோ தங்கம், ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பல பொருட்களையும் போலீசார் மீட்டனர். இந்த கொள்ளைக்கு மூலக்காரணமாக இருந்த கோவிலின் தலைமை பூசாரியான கேசவன் போத்தி விசாரணைக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.

34 பேர் மீது வழக்கு

பின்னர் கொள்ளையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய கோவில் குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதலில் இந்த வழக்கின் விசாரணை தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை அந்த கோர்ட்டிலேயே வழக்கு விசாரணை நடந்தது. 2011-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 34 பேரில் வழக்கு விசாரணையின் போது இடைப்பட்ட காலங்களில் 10 பேர் இறந்து விட்டனர். திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர் மட்டும் இந்த வழக்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டார். இதனால் தற்போது 23 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது.

23 பேர் குற்றவாளிகள்

வழக்கை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன் விசாரித்து வந்தார். 27 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களுக்குரிய தண்டனையை தனித்தனியாக அறிவித்தார்.

திருவட்டாரை சேர்ந்த அப்பன் என்ற ஸ்ரீஅய்யப்பன் (வயது 75), கோபாலகிருஷ்ணன் ஆசாரி (77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்பாள் (75), முத்துக்குமார் (47), முத்துநாயகம் என்ற சிதம்பரம் (61), வேலப்பன் நாயர் (73), மாத்தூரை சேர்ந்த சுப்பிரமணியரு(69), தோவாளை மகாராஜ பிள்ளை (80), குலசேகரம் கோபாலகிருஷ்ணன் (79), தச்சநல்லூரை சேர்ந்த சங்கரகுற்றாலம் (88), கண்ணுமாமூடு அப்புகுட்டன் (67), நட்டாலம் குமார் (51), மயிலாடுதுறையை சேர்ந்த முருகப்பன் (77) ஆகிய 14 பேருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவட்டாரை சேர்ந்த சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66), மணிகண்டன் நாயர் (56), லட்சுமணன் (60), செம்பருத்திவிளை கேசவராஜூ (62), புதுக்கடை அய்யப்பன் ஆசாரி (72), தேங்காப்பட்டணம் ஆறுமுகம் ஆசாரி (69), பூட்டேற்றி அப்பாவு (75), கரமனையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆசாரி என்ற ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கு 3 வருடம் ஜெயில் தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் அனிதா ஜோஸ், யாசின் முகமது அலி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

Next Story