சென்னையில் இடி-மின்னலுடன் பலத்த மழை விடிய, விடிய பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி


சென்னையில் இடி-மின்னலுடன் பலத்த மழை விடிய, விடிய பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 9:17 PM GMT)

சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சென்னை,

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மழை லேசாக பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டியது. நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்றைய பகல் பொழுதும் மழையுடனேயே விடிந்தது. கருமேகங்கள் சூழ்ந்து காலையிலும் மழை ஓயாததால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் இருந்தது. தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிக் கூடங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் கொட்டும் மழைக்கு மத்தியில் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

பெரும்பாலான பள்ளிக்கூட நுழைவுவாயில்களில் மழைநீர் குளம் போல் தேங்கி இருந்ததால், சிரமத்துக்கு மத்தியில் மாணவ-மாணவிகள் வகுப்பு அறைகளுக்கு சென்றதை காண முடிந்தது.

போக்குவரத்து நெரிசல்

கனமழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கின. ஏற்கனவே குண்டும்-குழியுமாக காட்சி அளித்த சாலைகள் சகதி காடு போன்று காட்சியளித்தன. இதனால் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், கொளத்தூர் உள்பட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் செல்ல முடியாமல், தாமதமாக சென்றனர்.

நிலத்தடி நீர்மட்டம்

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், நேற்று முன்தினம் தான் அதிகளவு மழை பெய்துள்ளது.

சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை இன்னும் முழுமையாக தீரவில்லை. பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இன்றளவும் தண்ணீர் வருவது இல்லை. இத்தகைய சூழ்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்துவதற்கு இந்த மழை கை கொடுத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று சென்னையில் சில நாட்கள் கனமழை நீடித்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story