திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது


திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 10:28 PM GMT)

திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 36). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, தகராறு உள்பட 16 வழக்குகள் திருவண்ணாமலை தாலுகா மற்றும் கிழக்கு போலீஸ் நிலையங்களில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில் இவர் கையில் கத்தியை வைத்து கொண்டும், தகாத வார்த்தைகளால் பேசி கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏன் இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறாய்? என்று தேவதாசிடம் கேட்டு உள்ளனர். அப்போது அவர் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசி சப்-இன்ஸ்பெக்டர் ரவியையும் கத்தியால் குத்த முயன்றார்.

இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் தேவதாசை திருவண்ணாமலை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Next Story