சிவகாசி அருகே பரிதாபம்; ஆற்று மணலில் உயிரோடு புதைந்து தந்தை-மகன் சாவு


சிவகாசி அருகே பரிதாபம்; ஆற்று மணலில் உயிரோடு புதைந்து தந்தை-மகன் சாவு
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 8:55 PM GMT)

சிவகாசி அருகே வைப்பாற்று மணலில் உயிரோடு புதைந்து தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டைப்பட்டி பகுதியில் வைப்பாறு உள்ளது. இங்கு அனுமதியின்றி பலரும் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் மணல் எடுத்து செல்வார்கள்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான பிள்ளையார்(வயது55), என்பவரும் அவரது மகன் மாரியப்பன்(33) என்பவரும் நேற்று மாலை அந்த பகுதிக்கு மாட்டு வண்டியில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று தேடினர். அப்போது ஆற்றின் கரை பகுதியில் சுமார் 15 அடி ஆழமுள்ள குழியில் மணல் சரிந்து கிடந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்தவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த இடத்தை தோண்டினர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி பதைபதைக்க செய்தது. அந்த குழியில் மணலில் சிக்கி தந்தையும் மகனும் உயிரோடு சமாதி ஆகியிருப்பது தெரியவந்தது. புதைந்திருந்த பிள்ளையாரின் உடலும் மாரியப்பன் உடலும் அடுத்தடுத்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story