நொய்யல் அருகே, மொபட் மீது கார் மோதி பெண் பலி; கணவர் படுகாயம் - டிரைவர் கைது


நொய்யல் அருகே, மொபட் மீது கார் மோதி பெண் பலி; கணவர் படுகாயம் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2019 10:15 PM GMT (Updated: 20 Sep 2019 10:12 PM GMT)

நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நொய்யல், 

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள பூலாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவரது மனைவி கற்பகம் (55). இந்த நிலையில் கணவன்-மனைவிநேற்று ஒரு மொபட்டில் தவுட்டுப்பாளையத்தில் இருந்து பூலாம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஞாணப்பரப்பு பிரிவு சாலையில் திரும்பியபோது, பின்னால் கரூர் நோக்கி வந்த ஒரு கார் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கற்பகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜேந்திரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நடையனூர் அருகே உள்ள ஆலமரத்துமேடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story