நாகர்கோவிலில் பரபரப்பு காதல் தம்பதி மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது


நாகர்கோவிலில் பரபரப்பு காதல் தம்பதி மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2019 10:00 PM GMT (Updated: 21 Sep 2019 2:32 PM GMT)

நாகர்கோவிலில் காதல் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவரும் காரங்காடு கொடுப்பகுழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் அனிஷாவும் (25) காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் அனிஷா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், தனது காதலன் சுரேஷ்குமாருடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் நாகர்கோவில் பரமார்த்தலிங்கபுரத்தில் உள்ள சுரேஷ்குமாரின் சகோதரி ஸ்ரீஜா வீட்டில் வசித்து வந்தனர்.

தாக்குதல்

இதற்கிடையே அனிஷாவை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். பரமார்த்தலிங்கபுரத்தில் காதல் தம்பதி இருப்பது தெரிய வந்தது. நேற்றுமுன்தினம் இரவு அனிஷாவின் தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயபாரதி மற்றும் உறவினர்கள் சிவா (19), நாராயணன் ஆகியோர் காரில் பரமார்த்தலிங்கபுரத்துக்கு வந்தனர். அங்கு வீட்டில் இருந்த சுரேஷ்குமார் மற்றும் அவருடைய சகோதரியின் கணவர் சுரேஷ் ஆகிய 2 பேரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவர்கள் அனிஷாவை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர்.

உறவினர் ஒருவர் கைது

மேலும், அனிஷாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலியை பறித்தனர். இந்த நிலையில் தனது காதல் மனைவியை கடத்திச் சென்றதாக சுரேஷ்குமார் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அனிஷாவின் தந்தை ராஜேந்திரன், ஜெயபாரதி, சிவா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் தொடர்புடைய அனிஷாவின் உறவினரான சிவா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சுரேஷ் மற்றும் சுரேஷ்குமார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story