கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என ஆத்திரம் 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது


கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என ஆத்திரம் 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 8:05 PM GMT)

கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ், கொத்தனார். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ஐஸ்வர்யா தனது வீட்டின் அருகே உள்ள ஆசிரியை ஜெசிமோள் (46) என்பவரிடம் டியூசனுக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று ஜெசிமோள் வீட்டுக்கு டியூசனுக்கு சென்ற சிறுமி அங்கேயே தங்கினாள். மறுநாள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றாள். ஆனால், வகுப்பறையில் சிறுமி அழுது கொண்டே இருந்தாள்.

கரண்டியால் தாக்கினார்

இதை பார்த்த வகுப்பு ஆசிரியை சிறுமியிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என டியூசன் ஆசிரியை கரண்டியால் முதுகில் அடித்ததாக அழுதுகொண்டே கூறினாள். உடனே வகுப்பு ஆசிரியை, சிறுமியின் முதுகை பார்த்த போது, கரண்டியால் தாக்கப்பட்ட ரத்த காயங்கள் ஆங்காங்கே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாயார் ஞானத்தாய் (31) பள்ளிக்கு விரைந்து சென்று சிறுமியை அழைத்து வந்து குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை ஜெசிமோளை கைது செய்தனர்.

சாதுர்யமாக செயல்பட்ட ஆசிரியை

கரண்டியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டதால் சிறுமியை வீட்டுக்கு அனுப்பினால் தெரிந்து விடும் என்று சாதுர்யமாக தனது வீட்டிலேயே ஆசிரியை அன்று இரவு தங்க வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் ஆசிரியை தாக்கிய சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிறுமி முதுகில் காயத்துடன் இருக்கும் படங்கள் குமரி மாவட்டத்தில் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. 

Next Story