நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா? மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா? மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:00 PM GMT (Updated: 21 Sep 2019 8:16 PM GMT)

நெல்லை அருகே மளிகை கடைக்காரர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்,

நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 50). இவர் சிறுக்கன்குறிச்சி அருகே உள்ள வெட்டுவான்குளத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தங்கப்பாண்டி வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அருகே உள்ள குளத்து பகுதியில் சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் தங்கப்பாண்டியை வழிமறித்தனர்.

பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள், தங்கப்பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே, தங்கப்பாண்டி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, தங்கப்பாண்டிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தங்கப்பாண்டி சில சமயங்களில் இரவு நேரத்தில் நெல்லைக்கு மார்க்கெட் வேலைக்கு செல்வாராம். இதனால் அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து சுப்புலட்சுமி தூங்கி விட்டார்.

நேற்று அதிகாலை குளத்து பகுதிக்கு பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி வந்தனர். அப்போது அங்கு தங்கப்பாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேள்விப்பட்டதும் தங்கப்பாண்டியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பிணமாக கிடந்த தங்கப்பாண்டியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மோப்ப நாய் ‘ரிக்கி‘ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தங்கப்பாண்டியின் அண்ணன் மகன் முத்துப்பாண்டி. இவரும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் முத்துப்பாண்டியும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு தங்கப்பாண்டி ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் தரப்பினருக்கும், தங்கப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே, காதல் விவகாரத்தில் தங்கப்பாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தங்கப்பாண்டியை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மளிகை கடைக் காரர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story