வடக்குமாங்குடி அஞ்சுவழி வாய்க்கால் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


வடக்குமாங்குடி அஞ்சுவழி வாய்க்கால் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 9:35 PM GMT)

வடக்குமாங்குடியில் உள்ள அஞ்சுவழி வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் அஞ்சுவழி வாய்க்கால் உள்ளது. இந்த பகுதியின் முக்கிய பாசன வாய்க்காலாக திகழும் இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. வடக்குமாங்குடி பகுதியில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதர் செடிகள் வாய்க்காலில் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாய்க்காலில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளதால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தூர்வார வேண்டும்

குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்வதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வாய்க்காலை தூர்வாரி பாசனத்துக்கு உதவ வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

அஞ்சுவழி வாய்க்கால் ஒரு காலத்தில் வடக்குமாங்குடி கிராம மக்களின் முக்கிய பாசன வாய்க்காலாக இருந்து வந்தது. இந்த வாய்க்காலை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

ஆக்கிரமிப்புகள்

இதன் காரணமாக விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வாய்க்காலில் வடிந்தோடுவதற்கு வழி இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உடனடியாக அஞ்சுவழி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story